ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தை கைது @ சென்னை


சென்னை: சென்னை வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கணேஷ் (30). இவரது மனைவி சியாமளா (27). இவர்களுக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளநிலையில், சியாமளா 3-வதாக கர்ப்பமானார்.

அப்போது, எண்ணூரைச் சேர்ந்த ஒருவர், 3-வதாக பிறக்கும் குழந்தையை தன்னிடம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளார். முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த8 நாட்களுக்கு முன்னர் சியாமளாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அக்குழந்தையை மீதி பணத்தை பெற்றுக்கொண்டு ஏற்கனவே பேரம் பேசியபடி கணேஷ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சியாமளா வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் வழக்கு பதிந்து, குழந்தையை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர். கணேஷ், அவரது மனைவியை மிரட்டி குழந்தையை விற்பனை செய்துள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

x