நிலத்தின் சர்வே சான்றிதழை வழங்க விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம்- மதுரை பெண் சர்வேயர் கைது


சர்வேயர் ஜோதி

மதுரை: பேரையூர் அருகே நிலத்தை சர்வே செய்த சான்றிதழை வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (73). இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

இதுபற்றி பேரையூர் தாலுகா, சேடபட்டி குறுவட்ட சர்வேயரான ஜோதியைச் (45) சந்தித்த ராமசாமி தனது இடத்தை சர்வே செய்து கொடுக்க கூறியுள்ளார். ஆனால்,ஜோதி தொடர்ந்து தாமதம் செய்த நிலையில், கடந்த 6ம் தேதி ராமசாமியின் நிலத்தை அளந்துள்ளார்.

ஆனாலும், அதற்கான சான்றிதழை அவர் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இத்தொகையை கொடுக்க இயலாத ராமசாமி, ரூ.2 ஆயிரம் கொடுக்க சம்மதித்துள்ளார். இந்நிலையில், சர்வேயருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் யோசனைப்படி, நேற்று பேரையூர் பேருந்து நிலையத்தில் வைத்து, சர்வேயர் ஜோதியிடம் ரூ.2 ஆயிரத்தை ராமசாமி கொடுத்தார். அப்போது, அருகில் மறைந்திருந்த டிஎஸ்பி-யான சத்யசீலன் தலைமையிலான போலீஸார், ஜோதியை கையும், களவுமாக பிடித்தனர். தொடர் விசாரணைக்குப் பிறகு ஜோதி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

x