மனைவியை பைக்கின் பின்னால் கட்டி இழுத்துச் சென்ற கணவன் - அதிர்ச்சி வீடியோ


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரு நபர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி கிராமம் முழுவதும் இழுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் வைரலானது. இந்த வீடியோவில், ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளின் பின்னால் கட்டி இழுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பஞ்சௌடி காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் கூறுகையில், “இச்சம்பவம் நஹர்சிங்புரா கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. பிரேமரம் மேக்வால் (32) என்பவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி அதன்பின்னர் மோட்டார் சைக்கிளின் பின்னால் கட்டி இழுத்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த நிலையில், திங்கள்கிழமை இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அந்தப் பெண் தற்போது தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. இந்த வீடியோ வெளியானதும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

மேக்வால் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், இதனால் அவர் தனது மனைவியை அடிக்கடி தாக்கியதாகவும் அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். மேலும், மனைவியை கிராமத்தில் யாரிடமும் பேச விடவில்லை எனவும் அக்கம் பக்கத்தினர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

x