‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!


சிபிஐ ஆய்வு

பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை இன்று காலை தொடங்கினர்.

சிபிஐ அதிகாரிகள் குழுவினர் மேற்கு வங்கம் மாநிலம் மற்றும் சிக்கிமில் உள்ள 50க்கும் மேலான இடங்களில் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கியதாக அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள்

இந்தப் பட்டியலில் முன்னதாக இடம்பெற்றிருந்த 24 பேர்கள் தவிர்த்து புதிய சந்தேக நபர்களை குறிவைத்தும் இன்றைய சிபிஐ சோதனை அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களில் சிபிஐ பெரிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. முதல் சுற்று ஆய்வில் ஓர் அரசு அதிகாரி மற்றும் ஒரு இடைத்தரகர் என இருவரை சிபிஐ கைது செய்துள்ளது.

பாஸ்போர்ட் ஊழல் வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, 16 அரசு அதிகாரிகள் உட்பட 24 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலி ஆவணங்களின் அடிப்படையில், குடியுரிமை இல்லாதவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் உள்ளிட்ட தகுதியற்ற நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக எப்ஐஆர் விவரிக்கிறது.

சிபிஐ

மேற்கு வங்கத்தை பின்புலமாக கொண்ட இந்த பாஸ்போர்ட் மோசடிகள் மூலம், கடத்தல்காரர்கள் முதல் தீவிரவாதிகள் வரை இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலுமாக ஏராளமானோர் சுதந்திரமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். போலி பாஸ்போர்ட்கள் அதிகளவில் பிடிபட்ட சம்பவங்களைத் தொடர்ந்து அவற்றின் பின்னணியை விசாரிக்க சிபிஐ களமிறங்கியது. சாதாரண அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மட்டுமன்றி அரசியல் புள்ளிகள் சிலரும் இதில் சிக்குவார்கள் என்று எழுந்த தகவலால், மேற்கு வங்க அரசியல் வட்டாரமும் பரபரத்துக் கிடக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

x