டெல்லியில் 200 மீட்டர் தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்ட டாக்சி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் டாக்சி டிரைவர் 200 மீட்டர் தூரம் காரில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலானது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மஹிபால்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 8-ல் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலைய எல்லையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த வழியாக சென்றவர்கள், நெடுஞ்சாலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு, உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போது இறந்து கிடந்தது ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் விஜேந்திரா(43) என்று கண்டுபிடித்தனர். இதன் பின் அவர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கொள்ளை முயற்சியை எதிர்த்ததை அடுத்து அடையாளம் தெரிய நபர்கள், விஜேந்திராவை நெடுஞ்சாலையில் குறைந்தது 200 மீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்றது தெரிய வந்தது. விஜேந்திராவை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் விஜேந்திரா குடும்பத்திற்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
தொடரும் சம்பவங்கள்
இந்த ஆண்டு தொடக்கத்தில் தெற்கு டெல்லியில் உள்ள ஆஷ்ரம் சௌக்கிற்கும் நிஜாமுதீனுக்கும் இடையே பீகார் பதிவு எண் கொண்ட வாகனத்தில் டாக்சி டிரைவர் ஒருவர். சுமார் 2 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். காவல் துறை வாகனம் அந்த காரைத் துரத்தி டாக்சி டிரைவரை உயிருடன் மீட்டது.
இதே போல ஜனவரி 1, 2023 அன்று டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி சிங் என்ற 20 வயது பெண் 12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிர் இழந்தார். டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...