டி.கல்லுப்பட்டி அருகே கார் - பேருந்து மோதி விபத்து: 2 வயது குழந்தை உள்பட 2 பேர் உயிரிழப்பு


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே காரும் பேருந்தும் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 வயது குழந்தை உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், குழந்தையின் தந்தை உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள காடநேரியைச் சேர்ந்தவர் சென்ட்ராய பெருமாள். இவர், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் வசித்தார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்ப திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி பிரியா, 2 வயது மகள் சிவானிகா உள்ளிட்டோருடன் காரில் காடநேரிக்கு புறப்பட்டு வந்துள்ளார். வேலூரைச் சேர்ந்த அப்பீஸ் என்பவர் காரை ஓட்டியுள்ளார்.

இவர்கள் பயணித்த கார் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டி.கல்லுப்பட்டி பாலம் அருகே வந்தபோது, எதிரில் சென்ற அரசுப் பேருந்துடன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கி சேதமடைந்தது. காரில் பயணித்த சென்ட்ராய பெருமாளின் மகள் சிவானிகாவும் (2), உறவினர் சவுந்தரராஜனும் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்ட்ராயப் பெருமாள், அவரது மனைவி பிரியா, கார் ஓட்டுநர் அப்பீஸ் (28) மற்றும் சுரேஷ் (35), திருப்பத்தூரைச் சேர்ந்த லில்லி (53), சாந்தா (52) ஆகியோர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த டி.கல்லுப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x