காதலை ஏற்க மறுத்த 15 வயது சிறுமி ரயிலின் முன் தள்ளிக் கொலை - இளைஞர் வெறிச்செயல்


ராஜஸ்தான்: உதய்பூரில் காதலை நிராகரித்த 15 வயது சிறுமியை ரயில் முன் தள்ளிக் கொன்ற நபரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

உதய்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல்நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி இரவு 15 வயது சிறுமியின் தந்தை, தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார். கணினி வகுப்புக்குச் சென்ற தனது மகள் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர் புகாரளித்தார். இதையடுத்து, விசாரணையை தொடங்கிய போலீஸார் சிறுமியை தேடும் பணியில் இறங்கினர்.

இதற்கிடையே, உதய்பூர் ரயில் தண்டவாளத்தில் சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சிறுமியை அடையாளம் காண்பதற்கு வரவழைக்கப்பட்ட காணாமல் போன சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள், அவர் தங்கள் மகள்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து புலனாய்வு விசாரணை மேற்கொண்ட போலீஸார், ராம் சிங்கின் மகன் ஷூர்வீர் சிங் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது கைது செய்யப்பட்ட நபர், சிறுமி தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால், சிறுமியுடன் பேசவேண்டும் எனக் கூறி அழைத்துச்சென்று, ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

x