தஞ்சாவூர்: மாமனாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது


பிரதிநிதித்துவப் படம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமனாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வழக்கறிஞர் ஒருவரிடம் கிளர்க்-காக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிய அற்புதம் வடக்கு வாசல் நான்கு ரோட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஓடி வந்த போது அவரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதனைப் பார்த்த அற்புதத்தின் மனைவி சுபாங்கினியும் (65) பின்னால் ஓடி வந்துள்ளார்.

கணவரை வெட்டிய மர்ம நபர்களை தடுக்கும் போது அவரையும் தலையில் வெட்டி உள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் அற்புதத்தை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி தலையை சிதைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், துணை கண்காணிப்பாளர் ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுப்பிரமணியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், காயமடைந்த சுபாங்கினியை காப்பாற்றி சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த அற்புதத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலை எதற்காக நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அற்புதம் என்பவர் கொலை வழக்கில் அவரது இரண்டாவது மருமகனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அற்புதத்தின் இரண்டாவது மகள் மேனகா இவரை சக்திவேல் என்பவர் திருமணம் செய்துள்ளார். சக்திவேல் சசிகலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் இதனை அற்புதம் தட்டிக் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் விவாகரத்து கேட்டு சக்திவேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அற்புதம் சக்திவேலின் இரண்டாவது மனைவியான சசிகலாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் கூலிப்படையினரை வைத்து மாமனாரை கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் சக்திவேலை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.