மன்னார் வளைகுடா கடலில் தூக்கி எறியப்பட்ட 5 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்


மன்னார் வளைகுடா பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்த முயன்ற 4 கிலோ 740 கிராம் தங்கத்தை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே, மன்னார் வளைகுடா பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்கிடமான ஒரு படகை விரட்டிச் சென்றபோது, படகில் இருந்தவர்கள் ஒரு பார்சலை கடலுக்குள் தூக்கி எறிந்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து, கடற்படையில் உள்ள நீச்சல் வீரர்கள் கடலில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டு, தூக்கி எறியப்பட்ட பார்சலைக் கைப்பற்றினர். அதில் 4 கிலோ 740 கிராம் எடையிலான தங்கக் கட்டிகள் இருந்ததும், அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 3.30 கோடி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தங்கக் கட்டிகள், தமிழககடல் பகுதிக்கு கடத்த முற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், கடத்தலுக்குப் பயன்பட்ட படகை, கல்பிட்டி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்,தப்பிச் சென்ற கடத்தல்காரர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்

x