திருவாரூர்: அடகுக் கடை பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள், 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை 


திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அடகுக் கடையை உடைத்து 40 பவுன் தங்க நகை, 4.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆலத்தம்பாடி கடைவீதியில் சங்கர் என்பவர் அடகுக் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று காலை கடை வீதிக்கு வந்த சங்கர், தனது கடையின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டைக் காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக கடையின் அருகே சென்று பார்த்தபோது, கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 4.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. உடனடியாக ஆலிவலம் காவல்துறையினருக்கு இது குறித்து சங்கர் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலிவலம் போலீஸார், மோப்பநாய் உதவியுடன் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையில் சிசிடிவி கேமரா இருந்தும், அது வேலை செய்யாத காரணத்தினால் கடையின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

x