பழவேற்காடு அருகே சிறிய பிளாஸ்டிக் பந்து தொண்டையில் சிக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு


பிரதிநிதித்துவப்படம்

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே சிறிய பிளாஸ்டிக் பந்து தொண்டையில் சிக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அரங்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். மீனவரான இவருக்கு சர்வேஷ் என்ற எட்டு மாத ஆண் குழந்தை இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குழந்தையை வீட்டில் படுக்க வைத்துவிட்டு, பெற்றோர் வீட்டு வேலையில் ஈடுபட்டனர். அப்போது குழந்தை சிறிய பிளாஸ்டிக் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

பெற்றோர் கவனிக்காத போது அதனை விழுங்கியது. இதனால், பந்து தொண்டையில் சிக்கி குழந்தை மூச்சு திணறலால் அவதியுற்றது. இதனைத் தொடர்ந்து குழந்தை சர்வேஷை பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள், தொண்டையில் சிக்கிய பந்தை எடுத்து வெளியே எடுத்ததோடு, குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். இந்தநிலையில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

x