17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு அடையாறு ஆற்றில் வீச்சு: சென்னையில் பரபரப்பு


ஜாஃபர்கான்பேட்டை: சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு, உடல் அடையாற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைபள்ளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக பலமுறை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சய் மாயமானார். அவரை பல்வேறு இடங்களிலும் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ஜாஃபர்கான்பேட்டை அடையாற்றில் சடலம் ஒன்றும் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குமரன் நகர் போலீஸார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்திய போது, அது மாயமான சஞ்சயின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சஞ்சயின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததோடு, அவரது சடலத்தின் அருகே அரிவாள் ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சஞ்சய் உடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x