விருத்தாசலம் அருகே கார் ஓடையில் கவிழ்ந்து விபத்து: 2 சிறுமிகள் உட்பட 8 பேர் படுகாயம்


கடலூர்: விருத்தாசலம் அருகே கார் ஓடையில் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், மாரண்ட ஹல்லியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (49). இவர் தனது மனைவி காயத்ரி (45), மகள்கள் யுவஹரிணி (13), மகதி (10), சகோதரர் சரவணன் (55) மற்றும் உறவினர்கள் சுபஸ்ரீ (43), சித்ரா (64), கலையரசன் (33) ஆகியோருடன் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு காரில் வந்துள்ளார். விசேஷம் முடிந்து இன்று காலை அனைவரும் தருமபுரிக்கு காரில் புறப்பட்டனர். காரை ஸ்ரீதர் ஓட்டினார்.

கார் விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் குறுக்கே திடீரென பைக் ஒன்று வந்தது. பைக்கின் மீது மோதாமல் இருக்க, ஸ்ரீதர் காரை வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். இதில் சாலையோரத்தில் சென்றுகொண்டிருந்த மாடு மீது கார் மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த ஓடையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறினர். இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் ஓடிச் சென்று காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, படுகாயமடைந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் 5 மாதம் சினையாக இருந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. விருத்தாசலம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x