பிஹார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: 3ம் வகுப்பு மாணவனை நிஜ துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்


சுபால்: பிஹாரில் நிஜ கைத்துப்பாக்கியுடன் இன்று பள்ளிக்கு வந்த 5 வயது சிறுவன் சுட்டதில், 3ம் வகுப்பு மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

பிஹார் மாநிலம் சுபால் மாவட்டம், லால்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் பயிலும் 5 வயது சிறுவன் இன்று தனது பையில் கைத்துப்பாக்கியை மறைத்துக்கொண்டு வந்துள்ளான். இந்நிலையில் அந்த சிறுவன், அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 10 வயது சிறுவனின் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தான்.

அதைத் தொடர்ந்து அந்த சிறுவன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் பள்ளிக்கு துப்பாக்கி எவ்வாறு கொண்டு வந்தான், அந்த துப்பாக்கி யாருடையது என்பது குறித்து விசாரித்து வருவதாக சுபால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷைஷவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகள் தவறாமல் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.

x