கயிறு அறுந்து 100 அடி கிணற்றில் விழுந்த 3 தொழிலாளர்கள் பலி; கதறும் உறவினர்கள்


திருவெண்ணைநல்லூர்: விழுப்புரம் அருகே 100 அடி ஆழ கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (40) மற்றும் நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.

நேற்று இரவு 8 மணி அளவில், கிணறு ஆழப்படுத்தும் பணியில் இந்த மூன்று தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர். பொக்லைன் இயந்திரத்தில் இரும்பு கயிறு கட்டி மூவரும் பக்கெட் மூலம் கிணற்றுக்குள் இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு கயிறு அறுந்து விழுந்தது. இதில் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த தொழிலாளர்கள் மூவரும், கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொழிலாளர்களின் உறவினர்கள், மூவரது உடலையும் கிணற்றிலிருந்து மீட்டனர். அப்போது பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநர் மற்றும் நிலத்தின் உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி அவர்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணைநல்லூர் போலீஸார், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, மூவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே மூவரும் இரும்பு கயிறு அறுந்து விழுந்ததால் உயிரிழக்கவில்லை எனவும், கிணற்றை ஆழப்படுத்த சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தியதால், வெடிப்பு ஏற்பட்டு மூவரும் உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கண்ணன் உட்பட மூவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x