திருவாரூர்: ப்ளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை


திருவாரூர்: பதினொன்றாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி பொங்கலுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக தனது தாயுடன் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிய போது திருச்சி மாவட்டம், பெரியசூரியூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (41) என்பவர் திருவாரூரில் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த போது, பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்திச் சென்று தனது உறவினரின் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக மாணவியின் தந்தை கொடுத்த, புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ராஜ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் வாதாடினார். இந்நிலையில், இன்று நீதிபதி சரத்ராஜ், குற்றவாளி ராஜ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் வழங்கியுள்ளதால் மீதமுள்ள ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வாதாடினார்.

x