எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் பைக்கும் மோதி விபத்து: தாய், மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு


பாம்பன்: ராமேஸ்வரம் அருகே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் பைக்கும் மோதிய விபத்தில், சந்தைக்குச் சென்ற தாய், மகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நேற்று மாலை வாரச்சந்தைக்கு பாம்பன் அக்காள் மடம் பகுதியைச் சேர்ந்த சரோஜினி (38) அவரது மகள் அகில் வதனா(16) ஆகிய இருவரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சந்தை எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது‌.

இதில் விபத்தில், பைக்கில் வந்த பாம்பன் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த தேவஜீவன் (23),அவரது சகோதரி முவேதா (16), சரோஜினி, அகில் வதனா ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தேவஜீவன் உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த சரோஜினி, அவரது மகள் அகில் வதனா இருவரும் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்களும் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். முவேதா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாம்பனில் சாலை விபத்தில் தாய், மகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x