மும்பையில் மர்ம கும்பல் அட்டூழியம்: துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை


நவி மும்பை: ஒரு கடையில் துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் 3 பேர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையின் கார்கர் பகுதியில் உள்ள பிஎம் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடைக்குள் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் 3 பேர் ஹெல்மெட் அணிந்தவாறு புகுந்தனர். அவர்கள் நகைக்கடை ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி நகைகளை தருமாறு மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடை ஊழியர் ஒருவர் எச்சரிக்கை அலாரத்தை அழுத்த முயன்றார், அவரை மர்ம நபர் தாக்கினார். மேலும் கடைக்குள் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவர் கடை ஊழியர்களை மிரட்டிக் கொண்டிருக்கையில் மற்ற இருவரும் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

அப்போது மர்ம நபர்களை விரட்டிப் பிடிக்க பொதுமக்கள் அவர்களை துரத்திச் சென்றனர். எனினும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். கடையில் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நவி மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x