சென்னை | 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்


சென்னை: சென்னை புனித தோமையர் மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆலந்தூர் அலிகான் தெருவை சேர்ந்த கண்ணன் (56) என்பவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணை முடிந்து, கடந்த 2007-ல் கண்ணன் உட்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 7 நாள் பரோல் அனுமதிக்கப்பட்டு கண்ணன் கடந்த 2012 ஜனவரி 28-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் அவர் தலைமறைவானார். இதுகுறித்து போலீஸார் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கண்ணனை ஆலந்தூர் பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

x