பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது


காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டுமனைப் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் இன்று கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமரவேல் (31). இவர் தனது வீட்டுமனைப் பட்டாவை பெயர் மாற்றம் செய்வதற்காக திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலரான கருணாகரனை அணுகியுள்ளார். அதற்கு கருணாகரன், பட்டாவை ஆன்லைனில் பதிவேற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து விவசாயி குமரவேல் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமரவேலிடம் கொடுத்து அதை கருணாகரனுக்கு தரும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி, கருணாகரனை அருங்குன்றம் சாலைக்கு வரவழைத்து அந்த ரூபாய் நோட்டுகளை குமரவேல் அவரிடம் கொடுத்துள்ளார். கருணாகரன் அந்தப் பணத்தை வாங்கும்போது, ஏற்கெனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x