குடும்பத்தகராறில் விபரீதம்: அண்ணி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை


திருப்பதி: ஆந்திராவில் குடும்பத் தகராறு காரணமாக அண்ணி மற்றும் அண்ணனின் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் மென்பொருள் பணியாளரான குடிமெட்லா மோகன். இவருக்கு தாசு என்ற மூத்த சகோதரரும், சுனிதா என்ற அண்ணியும் உள்ளனர். தாசு தம்பதிகளுக்கு தேவிஸ்ரீ, நீரஜா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மோகனுக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் மோகனுக்கு முழுமையான உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தனது மனைவியுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக தாசுவின் குடும்பத்தினருக்கு அந்த பெண்ணின் பெற்றோர் தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கச் சென்ற மோகனுக்கும், தாசுவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தாசுவின் வீட்டிற்கு வந்த மோகன், அங்கு தாசு இல்லாததால் அவரது மனைவி சுனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மோகன், அண்ணி சுனிதா, அவரது இரண்டு குழந்தைகள் தேவிஸ்ரீ மற்றும் நீரஜா ஆகியோரை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்திக் கொலை செய்துள்ளார்.

இதன் பின்னர் அவரும் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, அனைவரும் சடலமாக கிடப்பது தெரியவந்தது. உடனடியாக இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நால்வரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x