50 முறை கத்தியால் குத்தி ஜிம் உரிமையாளர் கொலை: வெளியான அதிர்ச்சி வீடியோ


டெல்லி: இளைஞரை தாக்கிய ஜிம் உரிமையாளரை, மற்றொரு இளைஞர் கத்தியால் 50 முறை குத்திக் கொலை செய்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு டெல்லியின் பஜன்பூர் பகுதியில் கள்ள காம்ரி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் என்ற சுமித் சவுத்ரி(28). ஜிம் உரிமையாளரான அவர், வீட்டிற்கு வெளியே ஒரு நபருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே அமர்ந்திருந்தவரை சுமித் சவுத்ரி உதைத்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரு இளைஞர், திடீரென கத்தியை எடுத்து சுமித் சவுத்ரியை 50 முறை குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதன்பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தொப்பி அணிந்த நபர், ஜிம் உரிமையாளரின் வயிற்றில் பலமுறை குத்துகிறார். இதில் சுமித் சவுத்ரி வாய்க்காலில் விழுகிறார். அப்போது நாய் ஒன்று, கத்தியால் குத்தியவரை நோக்கி குரைத்ததுடன் கடிக்க முயற்சிக்கிறது. இதன் பின் கத்தியால் குத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விடுகிறார். அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்த நபர், அப்படியே நின்று கொண்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது..

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," கொலை முயற்சி வழக்கில் சுமித் சவுத்ரி தண்டிக்கப்பட்டு ஜாமீனில் சமீபத்தில் தான் வெளியே வந்துள்ளார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

இந்த கொலைச் சம்பவத்தின் வீடியோவை ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் பகிர்ந்துள்ளார். அதில், " டெல்லியில் சட்டம் ஒழுங்கு மத்திய அரசு கையில் உள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் டெல்லியில் குற்றவாளிகள் தைரியமாக குற்றங்களை செய்கின்றனர். போலீஸார் மீது அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. எனவே டெல்லி மக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்கின்றனர். ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கடவுளின் அருளில் உள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

x