உ.பியில் இருந்து டெல்லிக்கு கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 17 வயது சிறுமி தற்கொலை


கனோஜ்: இரண்டு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கனோஜ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இரண்டு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதனால் அந்த சிறுமி தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள வயல் பகுதிக்கு அந்த சிறுமி சென்றுள்ளார். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் அந்த சிறுமியை டெல்லிக்கு கடத்திச் சென்றனர். அங்கு அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் நான்கு நாட்கள் கழித்து, அந்த சிறுமியை வீட்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று மிரட்டல் விடுத்தனர். ஆனால், அதனையும் மீறி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அவர் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் மிரட்டினர். புகாரை வாபஸ் பெறாவிட்டால் சிறுமியைக் கொலை செய்வோம் என்றும் மிரட்டினர்.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சவுக் காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கனோஜ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x