காதலனை துண்டு துண்டாக வெட்டி புதைத்த இளம்பெண்: உ.பியில் பயங்கரம்


பிரதாப்கர்: கணவருடன் சேர்ந்து காதலனை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ஃபதான்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி புஷ்பா. இவர்கள் இருவரும் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர். அங்கு பிஹார் மாநிலம், முனியாரி அணையைச் சேர்ந்த சிவநாத்(45) என்பவர் வேலை செய்துவந்தார். அப்போது அவருக்கும், புஷ்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த தொடர்பு தகாத உறவாக மாறியது. இந்த நிலையில், சிவநாத்திடமிருந்து புஷ்பா விலகிச் செல்ல முயன்றார். ஆனால், அவருடனான உறவை சிவநாத் முறிக்க தயாராக இல்லை. இதனால் அவருக்கும் புஷ்பாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் தனது கணவருடன் சேர்ந்து சிவநாத்தை கொலை செய்ய புஷ்பா முடிவு செய்தார். அதன்படி ஒரு மாதத்திற்கு முன்பு நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு புஷ்பா பிரதாப்கருக்கு வந்தார். அப்போது அவரது காதலர் சிவநாத்தையும் ஊருக்கு அழைத்து வந்துள்ளார். தனது தோழி பூனத்தை அவரது வீட்டில் சந்திக்க வேண்டும் என்று சிவநாத்தை புஷ்பா அழைத்து வந்துள்ளார்.

அங்கு சென்ற சிவநாத்தை புஷ்பாவும், அவரது கணவர் வினோத்தும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். அதன் பிறகு கூரிய ஆயுதங்களால் சிவநாத் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி பூனம் வீட்டில் புதைத்தனர். இதன் பின்னர் வினோத்தும், புஷ்பாவும் குருகிராமிற்கு மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தங்களது மகனை காணவில்லை என்று சிவநாத்தின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். அவரை பிஹார் போலீஸார் தேடி வந்தனர். அப்போது அவர் புஷ்பாவுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. செல்போனில் கடைசியாக அவரிடம் தான் சிவநாத் பேசினார் என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

இதையடுத்து புஷ்பாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அவரை, கணவருடன் சேர்ந்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தோழி வீட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரதாப்கரில் உள்ள பூனம் வீட்டில் இருந்து சிவநாத் உடலை போலீஸார் மீட்டனர். சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் புஷ்பா, பூனம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான வினோத்தை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x