கர்நாடகாவில் அண்ணன் மகனைச் சுட்டுக்கொன்ற முதியவர்: அதிகாலையில் நடந்த பயங்கரம்


சிக்கபள்ளாப்பூரில் இன்று அதிகாலை தனது அண்ணன் மகனை முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபந்தே தாலுகாவில் உள் ஹம்பசந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமது(66). சவுதியில் வேலை செய்து வந்த இவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரது அண்ணன் மகன் நசீர் அகமது(46). இந்த நிலையில் இன்று அதிகாலை நசீர் அகமதுவை பஷீர் அகமது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நசீர் அகமது பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தடுக்க வந்த அவரது நசீர் அகமதுவின் தந்தை மாபுசாபியை துப்பாக்கியால் பஷீர் அகமது தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த குடிபந்தே காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த மாபுசாபியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட நசீர் அகமது உலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பஷீர் அகமதுவை கைது செய்தனர். எதற்காக அவர் அண்ணன் மகனை கொலை செய்தார் என்பது குறித்தது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிக்கபள்ளாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x