மூடநம்பிக்கையால் வெறிச்செயல் - 2 மகள்களைக் கொன்று ரத்தத்தை சிவலிங்கத்தில் பூசிய தந்தைக்கு ஆயுள் தண்டனை


பெலகாவி: தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று அவர்களின் ரத்தத்தை சிவலிங்கத்தில் பூசிய அவரது தந்தைக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ஏபிஎம்சி காவல் நிலையத்திற்குபட்ட கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில் சந்திரகாந்தா பாண்டேகர். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு அஞ்சலி(8), அனன்யா(4) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், அனில் தனது பூர்வீக வீட்டை விற்க முயன்றார். ஆனால், அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

இந்த நிலையில் அவரது இரண்டு மகள்களைக் கொன்று சிவலிங்கத்தில் அவர்களது ரத்தத்தை பூசினால் வீடு விற்று விடும் என்றும், எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று அனிலுக்கு கனவு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனில் தனது மகள்களுடன் பூர்வீக வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு 2021 ஜூலை 14-ம் தேதி காலை வந்தார்.

அங்கு தனது இரண்டு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, அவர்களின் ரத்தத்தை ஜிகாலியில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூசியுள்ளார். இதையறிந்த அவரது மனைவி ஜெயஸ்ரீ, தனது கணவர் மீது ஏபிஎம்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் மஞ்சுநாத் ஹிரேமத், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

போலீஸ் விசாரணை, ஆதாரங்கள் மற்றும் வாதங்களைக் கேட்டறிந்த பெலகாவி 6வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, அனில் சந்திரகாந்தா பாண்டேகருக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் நஸ்ரீன் பங்காபுரே வாதிட்டார்.

x