சாலையில் திடீரென பற்றி எரிந்த கார் - சேலம் அருகே பரபரப்பு


சேலம்: தலைவாசல் அருகே சாலையோரம் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்நாத். இவர் இன்று காலை சொந்த வேலையாக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வருகை தந்திருந்தார். பின்னர் மீண்டும் சொந்த ஊர் செல்ல சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அதன்பின்னர் தலைவாசல் நத்தக்கரை டோல்கேட் அருகே வந்த போது, டீ குடிப்பதற்காக சாலையோரமாக காரை நிறுத்தியுள்ளார்.

பின்னர் காரில் இருந்து இறங்கி பேக்கரிக்குள் அவர் சென்ற போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் சென்று பார்ப்பதற்குள் கார் மளமளவென்று தீப்பிடித்து எரியத்துவங்கியது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் எழுந்த கரும்புகை காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x