மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது


விருதுநகர்: சாத்தூர் அருகே 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர் அருகே உள்ள பனையடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பனையடிபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக 8ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது வகுப்பு மாணவி ஒருவருடைய தாயின் செல்போனுக்கு ஆபாச வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி அந்த மாணவிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. மாணவியின் தாய் செல்போனை உறவினர் ஒருவர் பார்த்தபோது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. செல்போனை மாணவிதான் அதிக நேரம் பயன்படுத்துவார் என்பதால் மாணவியை அழைத்து குடும்பத்தினர் விசாரித்துள்ளனர்.

அப்போது, மாணவி தன்னுடைய வகுப்பு ஆசிரியர் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் தங்கபாண்டியனை கைது செய்தனர்.

x