ஹரியாணாவில் பயங்கரம்: நிலத்தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரைக் கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்


அம்பாலா: ஹரியாணாவில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தனது தாய், சகோதரர், அவரது மனைவி, குழந்தைகள் என தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை வெட்டிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹரியாணா மாநிலம், அம்பாலா மாவட்டம், நாரைங்கர் அருகே உள்ள நாராயன்கரின் ரேட்டர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பூஷன் குமார். இவர் நேற்று இரவு, தனது தாய் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கோடாரியால் வெட்டிக் கொன்றார். இந்தக் கொலை சம்பவம் நடந்தபோது, அவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பூஷன் குமார் 5 பேரையும் வெட்டிக் கொன்ற பிறகு, அனைவரின் சடலங்களையும் எரிக்க முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில், இரு சகோதரர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்ததும், இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் பூஷன் குமாரின் தாய் சரூபி தேவி (65), சகோதரர் ஹரிஷ் குமார் (35), இவரது மனைவி சோனியா (32), இவர்களது இரண்டு குழந்தைகள் யாஷிகா (5), மயங்க் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பூஷன்குமார் தந்தை ஓம் பிரகாஷ், நரைங்கரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்பலா காவல் கண்காணிப்பாளர் சுரீந்தர் சிங் சம்பவ இடத்துக்கு நள்ளிரவில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் தலைமறைவான பூஷன்குமாரை, தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். நிலத்தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது குடும்பத்தினரையே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

x