ரூ.10 லட்சம் தராவிட்டால் பலாத்காரம் செய்வேன்: மிரட்டிய போலி போலீஸ்காரர் கைது!


10 லட்ச ரூபாய் பணம் தராவிட்டால் பலாத்காரம் செய்து விடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த விவாகரத்தான இளம்பெண், மசாஜ் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரிடம் மசாஜ் செய்வதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த சுரேஷ் என்பவர் ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வரச்சொல்லியுள்ளார். அங்கு சென்ற இளம்பெண்ணை காரில் ஒரு இடத்திற்கு ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். 10 லட்சம் பணம் தராவிட்டால் பலாத்காரம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் தன்னை போலீஸ்காரர் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த இளம்பெண், தனது தோழிக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளார். இதன்பின் அவரது நண்பர் மூலம் சுரேஷிற்கு 1.50 லட்ச ரூபாய் பணம் தரப்பட்டுள்ளது. இதன்பின் அந்த பெண்ணை விமான நிலையம் அருகே இறக்கி விட்டு சுரேஷ் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுதொடர்பாக ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது இளம்பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்தவர் மகேந்திரகுமார்(33) என்பது தெரிய வந்தது. நாய் வளர்ப்பு தொழில் செய்யும் மகேந்திரகுமார், பெயர் மாற்றி பலரிடம் பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது மாரத்தள்ளி மற்றும் புலிகேசி நகர் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

x