மதுரை மாணவரை கடத்திய விவாகரம்: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை?


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மதுரையில் பள்ளி மாணவரை கடத்திய வழக்கில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி குஜராத்தில் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமியின்.கணவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தனது 14 வயது மகனுடன் வசிக்கிறார். தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் அவரது மகன். கடந்த 11-ம் தேதி வழக்கம் போல் ஆட்டோவில் சென்றபோது, கும்பல் ஒன்று காரில் கடத்தியது. பிறகு ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் மைதிலியிடம் பேசிய அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர், ரூ.2 கோடி கொடுத்தால் மகனை உயிருடன் விடுவோம் என மிரட்டினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த எஸ்.எஸ் காலனி காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படையினர் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் டவர் மூலம் மாணவர் இருக்கும் இடத்தை நெருங்கி, மாணவர், ஆட்டோ ஓட்டுநரை செக்கானூரணி அருகே மீட்டனர். தப்பியோடிய கும்பலை தேடினர்.

இந்நிலையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த தேனி செந்தில் குமார் (45), (பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்) அவரது கூட்டாளிகள் தென்காசி வீரமணி (30), காளிராஜ் (36), நெல்லை அப்துல் காதர் (38) ஆகிய 4 பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.

4 பேரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பணம் மற்றும் சொத்து பிரச்னையில் மாணவர் கடத்தலுக்கு மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் அவரது நண்பர் தூத்துக்குடி மகாராஜன் ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்தது. போலீஸ் பிடியில் சிக்காமல் அவர்கள் வெளிமாநிலத்திற்கு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படையினர் தொடர்ந்து தேடினர். இதற்கிடையில் குஜராத்திலுள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தபோது, சூர்யா தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, சூர்யா குஜராத்தில் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து இருப்பதாக எங்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அவரது தாயாரும் மகளின் தற்கொலை பற்றி உறுதி செய்வதற்கு காவல் நிலையத்திற்கு வந்தார். கணவரை பிரிந்த நிலையில், பெற்றோருக்கு எதிராக இருந்தபோதிலும், கடத்தல் வழக்கில் சிக்கிய விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். இருப்பினும், அவரது தற்கொலை தகவலை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளோம் என்றனர்.

x