அதிக அளவில் இருமல் டானிக் குடித்த 4 வயது குழந்தை உயிரிழப்பு: மதுரையில் பரிதாபம்


மதுரை: மதுரையில் அதிகளவில் இருமல் மருந்து குடித்த 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தபால்தந்தி நகர் பாமா நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டி. கட்டிடத் தொழிலாளியான இவரது 4 வயது மகள் சிவரஞ்சனி. குழந்தைக்கு காய்ச்சல், சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறப்பட்டுள்ளது. இருப்பினும், காய்ச்சல் மேலும் அதிகரித்த நிலையில், ஏற்கெனவே பார்த்த மருத்துவரிடம் நேற்று மீண்டும் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, மருத்துவரின் பரிந்துரையைத் தாண்டி அதிகளவில் இருமல் மருந்து கொடுக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சல் குறையவில்லை என, மருத்துவர் கூறியுள்ளார். பின்னர் அவரது அறிவுறுத்தலின் பேரில், பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே சிறுமி சிவரஞ்சனி உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தை அலெக்ஸ் பாண்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x