முன்விரோதத்தை தடுக்க சமாதானம் பேச சென்ற இளைஞர் குத்திக்கொலை @ திருப்பரங்குன்றம்


இளைஞர் கொலை

மதுரை: திருப்பரங்குன்றத்தில் முன்விரோதம் தொடராமல் தடுக்க, சமரசம் பேச சென்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்திக் ராஜா (29). திருப்பரங்குன்றம் மேலபச்சேரி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ராஜேந்திர பிரசாத் (22). அவரது நண்பர் சண்முகராஜ் (24). ராஜேந்திர பிரசாத், கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கருப்பாயூரணி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

இவர்களுக்குள் கடந்த தீபாவளியன்று தகராறு உருவானது. இதைத்தொடர்ந்து முன்விரோதமும் வளர்ந்தது. இதைத் தொடர்ந்து அடிக்கடி கார்த்திக் ராஜா, ராஜேந்திர பிரசாத் மீது இருசக்கர வாகனம் மூலம் மோதி தொல்லைகள் கொடுத்தாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் ராஜா வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்காக ராஜேந்திர பிரசாத், அவரது நண்பர் சண்முகராஜ் இருவரும் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராஜேந்திர பிரசாத் கார்த்திகை தராசின் இரும்பு படிக்கல்லால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து ராஜேந்திரபிரசாத் தோள்பட்டையில் குத்தினார்.

இதனால் படுகாயமடைந்த அவர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பரங்குன்றம் போலீஸார் ராஜேந்திரபிரசாத் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக கார்த்திக்ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.

x