குவைத்தில் மீண்டும் ஒரு தீ விபத்து சம்பவம்: கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு


குவைத் சிட்டி: அப்பாஸியா பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் மேத்யூ முழக்கல். இவரது மனைவி லினி ஆபிரகாம். இவர்களது குழந்தைகள் ஐசக், எரின். இவர்கள் விடுமுறையில் கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வந்துவிட்டு, கடந்த வியாழக்கிழமை இரவு மீண்டும் குவைத் திரும்பினர். மேத்யூ கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செவிலியராக பணியாற்றி வந்தார். குழந்தைகள் அந்நாட்டிலேயே பயின்று வந்தனர்.

குவைத்தில் உள்ள அப்பாஸியா என்ற பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அங்கு நேற்று இரவு அவர்களது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மேத்யூ முழக்கல், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கேரளாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தீ விபத்தில் உயிரிழந்த மேத்யூ முழக்கலுக்கு, இங்கு தாய் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். தீ விபத்தில் மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் மேத்யூ குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குவைத்தின் மங்காப் நகரில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 46 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் தீ விபத்து சம்பவத்தில் கேரள குடும்பத்தினர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x