கடலூர் நெல்லிக்குப்பம் அருகே தாய், மகன், பேரனை கொன்ற 2 இளைஞர்கள் கைது


பிரதிநிதித்துவப் படம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் ராஜா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் 6 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி கமலீஸ்வரி(60), வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மூத்த மகன் சுரேந்திரகுமார்(42), ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார்.

இளைய மகன் சுகந்த்குமார்(40). இவரது மனைவி விவாகரத்து பெற்றுவிட்டார். சுகந்த்குமார் ஹைதராபாத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வீட்டிலிருந்தபடியே பணி செய்து வருவதால், காராமணிக்குப்பத்தில் தாய் மற்றும் தனது மகன் நிஷாந்த் (10) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 15-ம்தேதி காலை பூட்டியிருந்த வீட்டில் இருந்து புகை வெளிவந்தது. தகவலறிந்து வந்த நெல்லிக்குப்பம் போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய் கமலீஸ்வரி, மகன் சுகந்த்குமார் மற்றும் பேரன் நிஷாந்த் ஆகியோர் எரிந்த நிலையில் சடலங்களாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி, அதே பகுதியைசேர்ந்த சங்கர் ஆனந்த்(21), அவரது நண்பர் ஷாகுல் ஹமீது(20) ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: சங்கர் ஆனந்தின் தாயார் கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது தாயாருடன் பழகி வந்த சுகந்த்குமார் தான் இதற்கு காரணம் என்று சங்கர் ஆனந்த் கருதி உள்ளார்.

இதனால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட சங்கர் ஆனந்த், கடந்த 12-ம் தேதி நள்ளிரவு கமலீஸ்வரி வீட்டுக்குச் சென்று சுகந்த்குமார், கமலீஸ்வரி ஆகியோரை வெட்டிக் கொலை செய்துள்ளார். மேலும், உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் நிஷாந்தையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், வீட்டை வெளியே பூட்டிவிட்டு சென்றுவிட்டார். தடயங்களை அழிப்பதற்காக தனது நண்பர் ஷாகுல் ஹமீது உதவியுடன் பெட்ரோல் வாங்கி, கடந்த14-ம் தேதி இரவு மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து, சடலங்களை எரித்துள்ளார். இது தொடர்பாக இருவரையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

x