ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்க துறை விசாரிக்க அனுமதி


கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுபோலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதி ஜாபர் சாதிக்கை கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை 17-ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, அமலாக்கத் துறை காவல் முடிந்து ஜாபர் சாதிக் நேற்றுமாலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பாக ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நிறைவடையாததால் மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார்.

அதையேற்க மறுத்த நீதிபதி அல்லி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் மட்டும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். ஜூலை 23-ம் தேதி மாலைஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதையடுத்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

x