அதிவேகத்தால் விபரீதம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி குழந்தை உட்பட 3 பேர் பலி!


பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகே விக்ரமம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (35). இவர் தனது மகன் மொனீஷ் (5) என்பவருடன், இன்று இருசக்கர வாகனத்தில் கீழ்க்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதேபோல் மன்னார்குடியில் இருந்து விக்னேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மதுக்கூர் நோக்கி வந்துள்ளார்.

மதுக்கூர் அருகே அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த விக்னேஷ், முன்னாள் சென்ற பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரில் வந்த ராதிகாவின் வாகனத்தின் மீது விக்னேஷ் ஓட்டிச் சென்ற வாகனம் அதிவேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுக்கூர் போலீஸார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயுடன் சென்ற சிறுவன் உட்பட மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x