கல்லூரி மாணவியை கடத்தி 12 நாட்களாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை: உ.பியில் அதிர்ச்சி


காசியாபாத்: கல்லூரி மாணவியை கடத்தி 12 நாட்களாக ஹோட்டலில் அடைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், அதை வீடியோவாக எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள மோடி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஜூன் 24-ம் தேதி கல்லூரிக்கு சென்றார். அதன் பின் அவர் காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இந்த நிலையில், ஜூலை 6-ம் தேதி காசியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் நிலையம் அருகே அந்த மாணவியை, ஒரு கும்பல் விட்டு விட்டுத் தப்பிச் சென்றது.

இது தொடர்பாக தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டனர். அப்போது அவரிடம் விசாரித்த போது, கல்லூரி சென்ற போது ஜூன் 24-ம் தேதி காலை 11 மணியளவில் இருவரால் கடத்தப்பட்டதாக கூறினார். இதன் பின் மீரட் மற்றும் ஜம்முவில் உள்ள ஹோட்டலில் வைத்து 12 நாட்களாக நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை அவர்கள் வீடியோவாக எடுத்ததாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர்.

ஆனால் காசியாபாத் மற்றும் மீரட் போலீஸார் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்று கூறி வழக்குப்பதிவு செய்ய மறுத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், எஸ்.பியிடம் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

x