சென்னை | பிரபல நகை கடையில் போலி நகையை அடமானம் வைக்க முயன்ற இளைஞர் கைது


சென்னை: பிரபல நகைக் கடையில் போலி நகையை அடமானம் வைக்க முயன்றதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர், 2-வது அவென்யூவில் பிரபலமான நகைக் கடை ஒன்று உள்ளது. இந்த நகைக் கடையில் தங்க நகைகளை அடமானம் வைத்தும் பணம் பெறும் வசதி உள்ளது. இந்நிலையில், இந்த நகைக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் வந்தார்.

வந்தவர், தான் கொண்டு வந்த தங்க நகையை அடமானம் வைக்க முயன்றார். அவர்மேல் சந்தேகம் அடைந்த நகைக் கடை ஊழியர்கள், அவர் கொண்டு வந்த நகையை ஆய்வு செய்தபோது அது கவரிங் நகை என தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீஸார் போலி நகையை அடமானம் வைக்க முயன்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

அந்த இளைஞர் சூளைமேடு, வடகரை பகுதியைச் சேர்ந்த ராஜா (39) என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அடமானம் வைக்க கொண்டு வந்த கவரிங் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

x