காதலனுடன் சென்ற மனைவி: பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்


தும்கூர்: மனைவி வேறு நபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதால் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்குக் காரணமான மனைவி, அவரது காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தேவராஜ் கடைக்கு வந்த ஹோசஹள்ளியைச் சேர்ந்த ஆனந்த குமார் என்பவருடன் மாதவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியது.

இந்த நிலையில் கணவர், தனது இரண்டு குழந்தைகளை விட்டு மாதவி, அவரது காதலன் ஆனந்தகுமாருடன் நேற்று வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவராஜ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு மனைவி மாதவி, அவரது காதலன் ஆனந்தகுமார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் அந்த கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த கடிதத்தில், ‘17 ஆண்டுகளுக்கு முன்பு மாதவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஹோசஹள்ளியில் கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தேன். எங்களுக்கு 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தினமும் கடைக்கு வந்து செல்லும் ஆனந்தகுமாருடன் மாதவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்’ என தெரிவித்துள்ளார். மேலும், தனது மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x