பணம் கேட்டு மிரட்டிய காதலி: தொழிலதிபர் தற்கொலை!


பணம் கேட்டு காதலி மிரட்டியதால் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எனது மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை எனது ஆன்மா சாந்தியடையாது என்று அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள சாய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார்(34). தொழிலதிபரான இவர் தான் காதலித்த பெண்ணால் ஏமாற்றப்பட்டதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த மனோஜ் குமார், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், ஓட்டலுக்கு விரைந்து சென்று மனோஜ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனோஜ் குமார் அறையில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒரு கடிதமும் சிக்கியது. அதில், தான் காதலித்த பெண் பொய்யான பலாத்கார வழக்கில் தன்னைச் சிக்க வைத்ததோடு பணம் கேட்டு பலமுறை மிரட்டினார் என்றும், தன்னுடைய வீட்டை 7 லட்ச ரூபாய்க்கு விற்று அந்தப் பணத்தையும் அவளிடம் கொடுத்தும் அவள் பணம் தாகம் தீரவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை எனது ஆன்மா சாந்தியடையாது என மனோஜ் குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், மனோஜ் குமார் காதலித்த பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x