விபத்தில் சிக்கிய திமுக எம்எல்ஏ-வின் கார்: 2 பேர் படுகாயம்!


மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் பயணித்த கார் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவன் உட்பட இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வருபவர் திமுகவைச் சேர்ந்த வசந்தம் கார்த்திகேயன். இவர் காரைக்கால் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது இன்னோவா கிரிஸ்டா காரில் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். என்.என்.சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக எருக்கடாஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன் (18), 12ம் வகுப்பு மாணவர் செல்வகுமார் (16) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

காளியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பைக் சாலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது அதிவேகமாக வந்த ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ-வின் கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக சாலை ஓரம் காரை திருப்பி உள்ளார். இருப்பினும் இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதேசமயம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த கார்த்தி என்பவரது வீட்டின் முன் பகுதியில் புகுந்தது. இதில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம், கார் ஆகியவை சேதமடைந்தது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டன் மற்றும் செல்வகுமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தான் வந்த அரசு வாகனத்தில், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக வசந்தம் கார்த்திகேயன் காயங்கள் இன்றி உயிர்த்தப்பினார். இந்த விபத்து தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கார்த்தி, பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x