பிஹாரில் பரபரப்பு: இந்தியா கூட்டணியில் உள்ள விஐபி கட்சித் தலைவரின் தந்தை படுகொலை


பாட்னா: பிஹாரில், இந்தியா கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை ஜிதன் சஹானி, தர்பங்காவின் சுபால் பஜார் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பிஹார் முன்னாள் அமைச்சரும், விஐபி கட்சித் தலைவருமானவர் முகேஷ் சஹானி. இவரது தந்தை ஜிதன் சஹானி. இவரது மூதாதையர் வீட்டில் ஜிதன் சஹானி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை தர்பங்கா எஸ்எஸ்பி ஜெகநாத் ரெட்டி உறுதி செய்துள்ளார்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஜிதன் சஹானியின் வீடு தர்பங்காவில் உள்ள சுபால் பஜாரின் அப்ஜலா பஞ்சாயத்தில் உள்ளது. முதல்கட்ட தகவலின்படி, ஜிதன் சஹானி வீட்டில் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் மும்பை சென்றிருந்த முகேஷ் சஹானி, தனது தந்தை கொல்லப்பட்ட தகவலறிந்ததும், பாட்னாவுக்கு திரும்பியுள்ளார்.

முகேஷ் சஹானியின் விஐபி கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு சிறிது முன்புதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணைந்தது. முகேஷ் சஹானி 'மல்லாவின் மகன்' என்று அழைக்கப்படுகிறார்.

பீகாரில் மல்லாக்களின் மக்கள் தொகை சுமார் 7 சதவீதமாகும். இந்நிலையில் முகேஷ் சஹானியின் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x