மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை


மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் 60 அடி ரோடு ராமச்சந்திரன் காம்பவுண்டைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலசுப்ரமணியன். இவர் மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவர் தினசரி காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை சொக்கிகுளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் பாலசுப்ரமணியன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென வந்த மர்மநபர்கள், பாலசுப்ரமணியனை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீஸார், பாலசுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த பகுதியில் தான், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வீடு உள்ளது. அவர் வீட்டின் அருகில் அதிகாலையில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x