வீட்டிற்குள் கருகிய நிலையில் கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்: பொதுமக்கள் அதிர்ச்சி


கடலூர்: நெல்லிக்குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் எரியூட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மருந்தாளுனரான சுரேஷ்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அவரது மனைவி கமலேஸ்வரி (60), மகன் சுதன்குமார் (40), பேரன் நிஷாந்த் (8) ஆகியோர் ராஜாராம் நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றத்துடன் புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்த போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. எனவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கே சோதனை செய்து பார்த்த போது, வீட்டில் இருந்த மூவரும் ரத்த வெள்ளத்தில் தீவைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் அங்கே தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த மூவரும் எதற்காக படுகொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x