திருச்சியில் மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை; போலீஸார் தீவிர விசாரணை!


திருச்சி பஞ்சப்பூர் பகுதியில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை மர்ம நபர்கள் கழுத்தறுத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டியை சேர்ந்த ராமர் மனைவி பச்சையம்மாள் (65). இவர் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 14) இரவு பச்சையம்மாள் கழுத்தறுபட்ட நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அலறியபடியே பெட்ரோல் பங்க் அருகே ஓடி வந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், காயமடைந்த பச்சையம்மாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி விசாரணை நடத்தினார். நகைக்காக மூதாட்டியை யாரேனும் கொல்ல முயன்றனரா என்று கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

x