முந்திச் செல்ல முயன்றதால் விபரீதம்: கார் மரத்தில் மோதி 2 பேர் பலி


ஹாவேரி: முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்வதற்காக ஓவர்டேக் செய்த கார் மரத்தில் மோதி இருவர் உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம் ஷிகாவி நகர் அருகே இந்த விபத்து இன்று நடைபெற்றுள்ளது. சவனூர் தாலுகாவில் உள்ள பெவினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் காரில் சென்றுள்ளனர். ஷிகாவி நகர் அருகே இந்த கார் ஓட்டுநர் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்வதற்காக ஓவர் டேக் செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இதில் காரில் இருந்த நீலப்பா மூலிமணி (23), சுதீப் கோடி (18) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஷிகாவி காவல் நிலைய போலீஸார் விரைந்துச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x