காதல் திருமணம் செய்த மைசூரு இன்ஸ்டா பிரபலம்: கர்ப்பமான நிலையில் கொலை?


இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் கொலை செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நன்கு அறியப்பட்டவர் நயனா என்ற மஞ்சுளா(23). இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரித்து அவற்றை பதிவேற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். இவருக்கு பெல்காம் மாவட்டம் மச்சே கிராமத்தைச் சேர்ந்த போரேஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.

இதையடுத்து அவர்களது காதல் இன்ஸ்டாகிராமில் வளர்ந்தது. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு போரேஷைத் தேடி மைசூரில் இருந்து பெல்காமிற்கு மஞ்சுளா வந்தார். இதனை தொடர்ந்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி போரேஷை அவர் திருமணம் செய்து கொண்டார்

இந்த நிலையில், திடீரென மஞ்சுளா மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் கர்ப்பமாக இருந்ததால் மஞ்சுளாவின் கணவர் போரேஷும், அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக மஞ்சுளாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த தங்கள் மகளை அவரது கணவர் போரேஷ் மற்றும் குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். ஆனால், கருவைக் கலைக்கமாட்டேன் என்று மஞ்சுளா கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் மஞ்சுளாவை இன்று கொலை செய்து விட்டு கணவர் போரேஷும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டதாக மஞ்சுளாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெல்காம் ஊரக காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை, கொலைப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை காவல்துறை டிசிபி ரோகன் ஜெகதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூன்று மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x