ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல் : 3 பேர் கைது!


மதுரையில் பள்ளி மாணவரை கடத்தி ரூ. 2 கோடி பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை எஸ்எஸ்.காலனி விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் ராஜலட்சுமி. இவரது கணவர் சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்களது 14 வயது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற போது, ஆம்னி வேனில் வந்த 4 பேர், ஆட்டோ ஓட்டுநருடன் மாணவனை கடத்தினர். இதன்பின், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் இருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் ராஜலட்சுமியிடம் பேசியுள்ளார்.

ரூ.2 கோடி பணத்துடன் குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் எனவும் இல்லையெனில் மாணவரை கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி மாணவனின் தாயார், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் காசி தலைமையில் போலீஸார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருக்குமிடத்தை நெருங்கினர்.

இதனை அறிந்த கடத்தல் கும்பல், மதுரை செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலம் என்ற பகுதியில் மாணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை இறக்கி விட்டு தப்பினர். அங்கு சென்ற போலீஸார் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மேலும் 3 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

x