கோவை பாரதியார் பல்கலைகழக விடுதி அறையில் மாணவர் தற்கொலை!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அவர் பயின்று வந்தார். நேற்று காலை அவருடன் விடுதியில் தங்கி இருந்த அனைவரும் வகுப்புகளுக்காக சென்று விட்டனர். ஆனால் சந்தோஷ் வகுப்புகளுக்கு செல்லவில்லை.

விடுதியில் அவர் தங்கி இருந்த நிலையில், மாலை மாணவர்கள் விடுதிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீஸார் சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மாணவர் சந்தோஷ் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

x